தேர்தல் பிரச்சாரத்தின்போது வட்டாச்சியரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய் அமைச்சர் மு.க.அழகிரி இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அப்போதைய மத்திய அமைச்சரான மு.க.அழகிரி, தென்மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக மதுரையில், மேலூர், வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிக்காரர் கோவிலில், கிராம தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக திமுகவினர் மீது அதிமுக சார்பில் தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் அப்போது மேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலராக இருந்த வட்டாச்சியர் காளிமுத்து கேமராவுடன் திமுக ஆலோசனை நடைபெறும் கோவிலுக்குள் நுழைந்தார்.
தேர்தல் அலுவலரின் வருகைக்கு தி.மு.க தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது தொடர்பாக தேர்தல் அலுவலருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் திமுகவினர் வட்டாச்சியர் காளிமுத்துவை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வட்டாச்சியர் காளிமுத்து கீழ்வளவு காவல்நிலையத்தில், தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து தன் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், மு.க.அழகிரி, முன்னாள் மேயர் மன்னன், ரகுபதி, திருஞானம், பொன்னம்பலம், கருப்பண்ணன், செந்தில், மயில்வாகனன், ராமலிங்கம், நாகராஜ், நீதிதேவன், போஸ், சோலை, தமிழரசன், சேகர், ராகவன், பாலு உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்ய்பட்டது.
இந்த வழக்கு இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தருது. நீதிபதி லீலாபானு முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாணையின்போது வழக்கில் தொடர்புடைய 20 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையின் முடிவில் இந்த வழக்கை ஜனவரி 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, திமுக செயல்பாடு குறித்த கேள்விக்கு, திமுகவின் செயல்பாடு தற்போது நன்றாக உள்ளது என்று பதில் அளித்துள்ளார்.
மேலும் நீதிமன்றத்தில் ஆஜரான மு.க.அழகிரியை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக மிசா.பாண்டியன் உள்ளிட்ட திமுகவினர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil