புதுச்சேரி மாநிலத்தில் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் சூறை ஆடப்படுகிறது என தி.மு.க எதிர்க்கட்சித் தலைவரும் சிவா எம்.எல்.ஏ இன்று சட்டமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் பேசினார்.
இதுகுறித்து பூஜ்ஜிய நேரத்தில் அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநில பத்திரப் பதிவுத் துறையின் முறைகேடுகள் பற்றி பேரவையின் கவனத்திற்கு கொண்டு வருவது சம்பந்தமாக:
புதுச்சேரி பத்திரப்பதிவுத் துறையில் பல சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தவறுகள் நடந்து நில உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக பத்திரங்களை முறையாக பதிவு செய்ய பல்வேறு விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. அதையும் மீறி முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. பதிவு நேரத்தில் விற்பவர், வாங்குபவர்களின் புகைப்படங்கள், கைரேகை, அடையாள அட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு பதிவிடும் முறை இருந்தும் இந்த முறைகேடுகள் எப்படி நடைபெறுகின்றன.
சமீபத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் அபகரிப்பு தீர்வாக புதுச்சேரி அரசு ஆட்சியர் தலைமையில் குழு அமைத்துள்ளது என்பது இந்த முறைகேடுகளுக்கு சாட்சியாக உள்ளது. பாதிக்கப்பட்ட பிரெஞ்சி குடியுரிமை வாசிகள் பிரெஞ்சு தூதரகத்திற்கு அளித்த புகாரின் பேரில் நமது மாநில அரசு இம்முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தமிழகத்தில் அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பணம், பரிசுப் பொருட்களை கைப்பற்றி இருப்பது செய்தியாக வருகிறது. இதுபோன்ற செய்திகளும், பத்திரப் பதிவுத் துறையில் உள்ள சில நடைமுறைகளும் பொதுமக்களுக்கு பாதிப்பை உருவாக்குகின்றன.
திருத்தல் பத்திரம் பதிவு செய்யும்போது சார் பதிவாளர் சர்வே எண், பெயர், முகவரி பற்றி முறையாக சரிபார்க்காமல் தவறும் நிலையில் மீண்டும் அந்த விற்பனை திருத்தல் பத்திரத்திற்கு துணை ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்து ஓராண்டு வரை காத்திருக்கும் நிலையும், மறுபடியும் பத்திரப் பதிவிற்கான வீண் செலவும் ஏற்படுகிறது. பதியும்போது முழுமையான ஆய்வு செய்யவும் திருத்தல் பத்திரத்திற்கான விதிமுறைகளை சுலபமாக்கவும் நடவடிக்கை தேவைப்படுகிறது.
நில மதிப்பீடு – GLR ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான ஓராண்டு காலத்திற்கு நில மதிப்பீடு செய்யப்படுகிறது. மதிப்பீடு முடிந்தவுடன் உடன் பத்திரப்பதிவு பணி தொடங்காமல் இரண்டு மாத காலம் பதிவிற்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே இந்த காலதாமதம் கலையப்பட்டு உடன் பத்திரப் பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
நகரக் திட்டக் குழும அனுமதியும் – பத்திரப்பதிவும் வீடுகட்ட மனை வாங்குபவர்கள் அனுமதிக்காக நகரத் திட்டக் குழுமத்திற்கு விண்ணப்பித்து குறித்த கட்டணத்தை செலுத்தியும் உடன் அனுமதி பெற முடியாமல் அலைகழிக்கப்படுகிறார்கள். லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. இது முற்றிலும் கலையப்பட வேண்டும்.
ஆகவே, இதுபோன்ற முறைகேடுகள் கலையப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை அரசு அக்கறையோடு பரிசீலித்து பத்திரப் பதிவுத் துறையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று பேசினார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“