அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22) திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் ரூ. 6.77 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை. வைகோ, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டி, திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் அன்பழகன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேசுகையில், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும், புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதற்கும் நன்றி தெரிவித்தார்.
அப்போது, எம்.எல்.ஏ பழனியாண்டி பிரதமருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்று கூறி, அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அப்பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி திருவேங்கடம் என்பவர் திடீரென எழுந்து, பழனியாண்டியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே, எம்.எல்.ஏ பழனியாண்டி, "யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும், உட்கார்" என்று திருவேங்கடத்தை ஒருமையில் பேசியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், எம்.எல்.ஏ பழனியாண்டிக்கு எதிராக திருவேங்கடம் பேசினார். இதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், திருவேங்கடத்தைச் சமாதானப்படுத்தி அமர வைத்தனர். இந்தச் சம்பவம் காரணமாக நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தி - க. சண்முகவடிவேல்