dmk mla anitha radhakrishanan dmk mla anitha car : தண்டுபத்து கிராமத்தில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரை மர்ம நபர்கள் சிலர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமாக பொறுப்பு வகிக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, தூத்துக்குடி தட்டார்மடம் பகுதியைச் சேர்ந்த செல்வன் குடும்பத்தினருக்கும் அந்த பகுதியின் உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளரான திருமணவேலுவுக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது.
இதனிடையே கடந்த 17ம் தேதி செல்வம் சொக்கன் குடியிருப்பிற்கு தனது பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவரது பைக் மீது கார் மோதியதில் அவர் கீழே விழ செல்வனை மர்ம கும்பல் கடத்தி சென்று அடித்தே கொன்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருமணவேல், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், செல்வன் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறியதோடு அவர்களது போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் . நேற்று, நள்ளிரவு ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் தனது காரை தாக்கியுள்ளதாக அனிதா ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் படங்களோடு குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் காரை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகளையும் பதிவிட்டுள்ளார்.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக்கொண்டு மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததோடு, சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திமுக எம்எல்ஏ கார் தாக்கப்பட்ட சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil