வேலூர் மாவட்டம், அனைக்கட்டில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி. வீரமணிக்கும் அனைக்கட்டு தொகுதி திமுக எம்.எல்.ஏ-வுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக மாவட்டம் முழுவதும் தமிழக முதலமைச்சரின் குறைதீர்வு முகாம் கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அதன் படிப்படையில் அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஒவ்வொரு தாலுக்கா வாரியாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைக்கட்டு தொகுதியில் முதலமைச்சரின் குறைதீர்வு முகாம் கூட்டத்தில் மனு அளித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியும் அனைக்கட்டு தொகுதியின் திமுக எம்.எல்.ஏ நந்தகுமாரும் பங்கேற்றனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது, மேடையில் இருந்த திமுக எம்.எல்.ஏ. நந்தகுமார் நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர், தனது தொகுதியில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிகாரிகளும் ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டிப் பேசினார். மேலும், அனைக்கட்டு தொகுதியைச் சேர்ந்த அம்பிகா என்பவரை மேடைக்கு அழைத்து, இவர் விதவை உதவித்தொகை கோரி மனு அளித்தும் இவருக்கு வழங்கப்படவில்லை. அதனால், அவருக்கு உடனடியாக விதவை உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கூறினார். இதற்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.எல்.ஏ நந்தகுமாருக்கும் அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அதிமுகவை சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ நந்தகுமார் பேசிக்கொண்டிருந்த மைக்கை அனைத்து கீழே தள்ளினார். இதனால், அங்கே அதிமுக – திமுகவினர் இடையே கைகலப்பும் தள்ளுமுள்ளும் நடந்தது. இதனால், அங்கே அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக காவல்துறையினர் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். மேலும், பாதுகாப்புக்காக காவல்துறையை குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.