2018-19 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் திமுக எம்ஏல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்துக் கொண்டு சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தமிழ்நாடு பட்ஜெட் இன்று(15.3.18) காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற அரங்கில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2018-2019 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு அரசு பெரும் கடன் சுமையில் மூழ்கியுள்ள நிலையில், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. துறை வாரியாக நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில், சட்டமன்றத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் வருகை தர தொடங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும், கருப்பு சட்டை அணிந்தவாறு வந்துள்ளனர். திமுக எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆகியோர் மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைப்பதில் தொடர்ந்து, தாமதப்படுத்தி வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்துக் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு, பட்ஜெட் தாக்கல் செய்வதை விமர்சித்தும், கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளதாகவும் திமுக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.