/indian-express-tamil/media/media_files/2025/10/14/durai-2025-10-14-11-28-06.jpg)
மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், திருச்சி ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தலைமை வகித்தாா். ஆட்சியா் வே.சரவணன், எம்.பி-க்கள் ஜோதி மணி, கவிஞா் சல்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில், மத்திய-மாநில அரசின் பங்களிப்புடன் நடைபெறும் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் துரை வைகோ கூறியதாவது, மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகளை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க ரயில்வே நிா்வாகம் உறுதியளித்துள்ளது. இதனைத் தொடா்ந்து மாநகராட்சி மூலம் மேற்கொள்ளும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு மே மாதம் பாலத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர உறுதியளித்துள்ளனா். இதேபோல, சந்திப்பு ரயில்நிலையப் பகுதியில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகளை ஜனவரி மாதத்துக்குள் முடிக்க ரயில்வே நிா்வாகம் உறுதியளித்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை பணிகளையும் ஒருங்கிணைத்து ஜூன் மாதம் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என உறுதியளித்துள்ளனா். அதேபோல், திருச்சி - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு இரயில், திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நின்றுசெல்ல வேண்டும் என்ற எனது கோரிக்கையை, திருச்சி கோட்ட மேலாளர் தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு பரிந்துரை செய்துள்ளார். விரைவில் நல்ல செய்தி வரும். திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை புதுப்பிப்பு பணிக்கு டெண்டர் வழங்கப்பட்டு, ஒப்பந்தக்காரர் உடனடியாக பணியைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சியை தலைமையகமாகக் கொண்டு புதிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி கோட்டம் டி.என்.எஸ்.டி.சி- திருச்சி (TNSTC -Trichy) அமைக்க வேண்டும் என்றும் அல்ட்ரா தாழ்தள (Ultra Low Floor) பேருந்துகளுக்கு சேலத்தில் எல்.எஸ்.எஸ் (LSS) கட்டணமும், திருச்சியில் டிலக்ஸ் கட்டணமும் வசூலிக்கப்படுவதற்கான தெளிவான விளக்கத்தை தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்திடம் கோரினேன். அதேபோல், அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்றும் பணிகளை விரைவாக முடிக்கவும், அந்த இடத்தில் ஐ.டி. செஸ் (IT SEZ) திட்டம் குறித்து தெளிவுபடுத்தவும் மாநகராட்சியை கேட்டுக்கொண்டேன் என்றாா்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரணி, காவல் துணை ஆணையா் ஈஸ்வரன் மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் மருத்துவர் ரொஹையா, பொன்மலை ஜெயசீலன், ஷியாம் மற்றும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி.சேரன் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.