ஆதார் அட்டையில், "எனது ஆதார், எனது அடையாளம்" என்ற வாசகம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளதன் மூலம் மாநில உணர்வுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக திமுக எம்.பி கனிமொழி குற்றம் சாட்டினார்.
பழைய ஆதார் மற்றும் புதிய ஆதார் அட்டைகளை ஒப்பிட்ட கனிமொழி தனது ட்விட்டரில், " அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழியில் எதை வேண்டுமானாலும், ஆதாருக்காக தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதி மொழியோடு கட்டாயமாக்கப்பட்ட ஆதாரில் இன்று மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன. ஆதார் அட்டையைப் புதுப்பிப்போர் மற்றும் புதிய அட்டைகள் பெறுவோருக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையில், " எனது ஆதார், எனது அடையாளம்" என்று வாசகம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. மாநில உணர்வுகள் இப்படிதான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், மற்றொரு ட்விட்டர் பதிவில்," தமிழக மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு பெரும் சிக்கலை மத்திய அரசு மாணவர்கள் மீது திணித்துள்ளது. நீட் தேர்வு ஆணையம், மாநிலவாரி மதிப்பெண் பட்டியலை வெளியிடாமல் தாமதப்படுத்துவதால்,தமிழக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுக்க முடியாமல் அல்லலுற்று வருகின்றனர். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தமிழக முதல்வர் தமிழகத்தை வஞ்சித்து பிஜேபிக்கு துதிபாடிக் கொண்டிருப்பார் " என்று தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில், கனிமொழியைப் பார்த்து நீங்கள் ஒரு இந்தியரா என்று சி.ஐ.எஸ்.எஃப் படை அதிகாரி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, இந்தி தெரிந்திருந்திருப்பது என்பது இந்தியன் என்பதற்கு சமமா? என்ற கேள்வியையும் கனிமொழி எழுப்பினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil