டெல்லியில், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை இன்று நேரில் சந்தித்த தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.
அந்தக் கோரிக்கை மனுவில், "என் தொகுதியான தூத்துக்குடியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள சாலைகளின் பராமரிப்பு பணிகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை NH-38 (பழைய NH-458) நான்கு வழிச்சாலையில் பல . பிளாக் ஸ்பாட் (Blackspots) இருப்பதால், பொதுமக்களுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை 38-இல், துரைசாமிபுரம், கீழ ஈரால், குறுக்குச்சாலை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பற்ற சாலைகள் அடையாளம் காணப்பட்டு 2015-18 காலக்கட்டத்திலேயே பட்டியலிடப்பட்டிருந்தாலும், இதுவரை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை. இந்த பாதுகாப்பற்ற சாலைகள் அகற்றுவதற்கான பணிகள் விரைந்து முடிக்கப்படுமானால், பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் மற்றும் பல்வேறு விபத்துகளைத் தவிர்க்கலாம்.
எனவே, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை 38-ன் பாதையில் உள்ள பாதுகாப்பற்ற சாலைகள் அகற்றுதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாகக் கூறியிருந்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்