/indian-express-tamil/media/media_files/2024/11/27/29fU4OoS0NhEFGPRGbGv.jpg)
தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் ஒருமித்த கருத்துடன்தான் உள்ளன. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென்மாநில எம்.பி.க்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்தார்.
இதுகுறித்து மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்ததாவது;
மத்திய அரசின் இப்போதைய கூற்றுப்படி தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்தில் எட்டு மக்களவைத் தொகுதிகள் வரை குறையும் வாய்ப்புள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார்.
தொகுதி மறுசீரமைப்பால், தென்மாநிலங்கள் முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமோ, சட்டத் திருத்தமோ வரும்போது தென்மாநிலங்களின் குரல் நலிந்ததாக இருக்கும். தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள நிலையில், அதற்கான வழிமுறைகளை அவர் விளக்கவில்லை.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என முதல்வர் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒத்திவைப்புத் தீர்மானம் அளிப்பதுடன், நேரமில்லாத நேரத்திலும் பேச முயற்சிப்போம்.
தென்மாநிலங்களின் எம்.பி.க்களுடன் இணைந்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்போம். இதில், மத்திய அரசு எத்தகைய தீர்வை வைத்திருக்கிறது என்று கேட்போம். தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் ஒருமித்த கருத்துடன்தான் உள்ளன. எனவே, கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் கருத்து வேறுபாடு இல்லாமல் எங்களுடன் ஒத்துழைக்கும் என்று திருச்சி சிவா கூறினார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.