/tamil-ie/media/media_files/uploads/2020/09/New-Project-45.jpg)
திமுகவில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிற நிலையில், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கிவைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி சார்பில், அவருடைய விசுவாசி ஒருவர் விண்ணப்பித்து திமுக உறுப்பினர் அட்டை வாங்கியுள்ளார்.
தமிழகத்தில் 2021-இல் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியில் பொறுப்புகளை நியமிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக முதன்முறையாக ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை நடத்துவதாக அறிவித்தது. அதன்படி, திமுகவில் ஆண்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கிவைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சமீபத்தில் தன்னை மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால், திமுக தலைமை மு.க.அழகிரியின் கோரிக்கையை பொருட்படுத்தவில்லை.
இந்த நிலையில், மு.க.அழகிரியின் ஆதரவாளார் கபிலன் என்பவர், திமுகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் மு.க.அழகிரி பெயரில் விண்ணப்பித்து உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் பகுதியின் திமுகவில் முன்னாள் செயலாளராக இருந்தவர் கபிலன். மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான கபிலன், அழகிரி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் கட்சியில் ஓரம் கட்டப்பட்டார். இவர், தற்போது ஆன்லைன் வழியாக நடைபெற்றுவரும் திமுக உறுப்பினர் சேர்க்கையில் மு.க.அழகிரிக்கு விண்ணப்பித்து உறுப்பினர் அட்டை பெற்று இருக்கிறார். இதன் மூலம், மு.க.அழகிரி திமுக உறுப்பினராகியுள்ளார்.
மு.க.அழகிரி பெயரில் உறுப்பினர் அட்டை வழங்கியிருப்பது குறித்து இன்னும் அக்கட்சி சார்பில் எதுவும் விளக்கம்தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் மூலம், திமுகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.