தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழ், 2019- 2020 நிதியாண்டில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான திமுக ரூ.45 கோடியே 50 லட்சத்தை தேர்தல் நிதியாக பெற்றுள்ளது.
தேர்தல் நிதி வசூல் தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் அனைத்து கட்சிகளும் 2019-20 நிதியாண்டில் வசூலித்த தொகை தொடர்பாக தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டன.
2019-20 நிதியாண்டில், தேர்தல் செலவுகளுக்காக அதிமுக பெற்ற ரூ.52 கோடியில், 46 கோடி டாடா நிறுவனத்தின் புரோகிரசிவ் தேர்தல் அறக்கட்டளை மூலமாகவும், 5 கோடியே 38 லட்சம் ரூபாயை ஐ.டி.சி. நிறுவனம் மூலமாகவும் பெற்றது.
தேர்தல் செல்வவீனங்களுக்காக திமுக பெற்ற 48 கோடியே 30 லட்ச ரூபாயில், 45 கோடியே 50 லட்சம் தொகையை தேர்தல் பத்திரம் மூலமாக பெற்றுள்ளது.
தேர்தல் அறக்கட்டளை என்றால் என்ன?
நன்கொடையாளர்கள் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நன்கொடை கொடுக்கப்பட்டது? என்ற தகவலை பாதுக்ககும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் தேர்தல் அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டன. இதன்மூலம், நன்கொடையாளர்கள் தங்கள் நிதியை தேர்தல் அறக்கட்டளைகளுக்கு கொடுக்கத் தொடங்கினர். அறக் கட்டளைகள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இந்த நிதியை பிரித்து கொடுக்கின்றன. இதில், டாடா அறக்கட்டளை மிகவும் பெயர் பெற்றது.
தேர்தல் நிதிப் பத்திரம் என்றால் என்ன? :
2017-18 பட்ஜெட்டின் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தேர்தல் நிதிப் பத்திரத்தை அறிவித்தார். இந்திய அரசின் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (1951) 29ஏ பிரிவின்கீழ், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு காலாண்டின் முதல் பத்து நாட்கள் வரை ரூபாய் 1,000, 10,000, ஒரு இலட்சம், 10 இலட்சம், 1 கோடி மதிப்பில் வெளியிடும் தேர்தல் பத்திரங்களை வாங்கிய 15 நாட்களுக்குள், அப்பத்திரங்களை தங்களுக்கு வேண்டிய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். தேர்தல் பத்திரங்களில் அதனை வாங்கியவர் பெயர் இடம்பெறாது. இந்தப் பத்திரங்களை வாங்கும் தகுதியான அரசியல் கட்சி அதை மாற்றும்போது, வங்கிக் கணக்கு மூலமே நிதியைப் பெற முடியும்.