/indian-express-tamil/media/media_files/2025/09/22/sellur-raju-2-2025-09-22-21-46-58.jpg)
கவர்ச்சி நடனம் போலத்தான் தி.மு.க வாக்குறுதிகள்: செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்
அ.தி.மு.க சார்பில் மதுரை வடக்கு மாசி வீதி- மேலமாசி வீதி சந்திப்பில் உள்ள விநாயகர் கோவிலில் திண்ணைப் பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாக விமர்சித்தார்.
செல்லூர் ராஜூ பேசுகையில், "துணை முதல்வர் 'ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும்' எனக் கூறினார். ஆனால் இப்போது நிலைமை என்ன? தி.மு.க ஆட்சியில் மக்களுக்கான வாக்குறுதிகள் சினிமாவில் கவர்ச்சி நடனம்போல, ஒரு பக்கம் கதை, ஒரு பக்கம் கவர்ச்சி டான்ஸ் என போலியாக மாறிவிட்டன" என்று சாடினார்.
நாய், பூனை வளர்ப்புக்கு வரி விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் தி.மு.க.வின் நிர்வாக நிலைமை. தேர்தல் வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றும் நிகழ்ச்சிகளாகவே மாறிவிட்டன என்று குற்றம் சாட்டினார். துணை முதல்வர் உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனை குறித்துக் கேலி பேசியுள்ளார். ஆனால் உண்மையில் மக்களுக்குத் தேவையான வளர்ச்சி நடவடிக்கைகள் தி.மு.க ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. 10 ஆண்டுகளில் தமிழக முன்னேற்றம் தடைப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது பெரிய நகைச்சுவை என்றும் அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு குறித்துப் பேசிய செல்லூர் ராஜூ, நீட் தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிதான் நீட் தேர்வை கொண்டு வந்தது. நீட் ரத்து செய்யும் முயற்சி வெற்றி பெறும் வரை, மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கியது அ.தி.மு.க.தான் என்று குறிப்பிட்டார்.
அ.தி.மு.கவின் பிரசார உத்தி குறித்து அவர் விளக்குகையில், எங்கள் தொண்டர்கள் இனி ஒவ்வொரு வார்டுகளாகவும், ஒவ்வொரு வீடுகளாகவும் சென்று, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா, இல்லையா எனக்கேட்டு கருத்துகளைப் பதிவு செய்வார்கள். அதோடு அவர்களின் ஆதார் எண்ணையும் சேகரிக்கிறார்கள் என்றார். மேலும், இன்று முதல் ஒவ்வொரு வார்டுகளிலும் ‘தி.மு.க.வின் உருட்டுகளும் திருட்டுகளும்- துரோக மாடல் உருட்டுகள்’ என்ற தலைப்பில் அ.தி.மு.க சார்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடகங்கள் சில முக்கிய விஷயங்களை செய்தியாக்காமல் நடிகர் விஜய் குறித்த கேள்விகளை எழுப்பி அதையே செய்தியாக்குவதாக அவர் குறைபட்டுக் கொண்டார். எனவே, இன்று விஜய் குறித்த எந்தக் கேள்விக்கும் தான் பதிலளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த திண்ணைப் பிரசார நிகழ்ச்சியில் அ.தி.மு.க நிர்வாகிகள் ராஜா, அண்ணாதுரை, பாண்டியன், குமார், திரவியம், சக்தி மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.