மத்திய அரசு தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று (சனிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.
திருச்சியில், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் கதிரவன், ஸ்டாலின் குமார், பழனியான்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ் முன்னிலையில் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேசுகையில், “ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்து நாடு முழுவதும் சமசீரான வளர்ச்சியே உருவாக்கி உதவுவதடன் நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும்.
ஆனால் இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதி நிலையை அறிக்கையாக தெரியவில்லை மாறாக தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்கள் மட்டுமே நிதி நிலையை தாராளமாக அளித்து கொடுத்தும் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலம் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த நாட்டின் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கை அமைத்திருக்கின்றது. இதனை கண்டித்து தான் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, பொதுக்குழு உறுப்பினர் கார்த்தி, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பகுதி செயலாளர் மோகன் நன்றியுரை ஆற்றினார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“