கோவை வடக்கு மாவட்ட திமுக மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதி கழகம் இணைந்து, முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை ஆர்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை தாங்கினார். பகுதிக்கழக செயலாளர் கார்த்திக் செல்வராஜ் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து இந்த பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தனது பேச்சில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஆர்.எஸ்.பாரதி, "எடப்பாடி பழனிசாமி பொய் மட்டுமே பேசி வருகின்றார். எதையெடுத்தாலும் பொய் பேசி அரசியல் செய்ய முயல்கின்றார். இந்தியாவிலேயே, மோடியை எதிர்த்து, மோடியே அலறும் விதத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுவது தமிழ்நாட்டில் தான்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், பெண்களுக்கான ஆட்சியாகத் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதையும் எடுத்துரைத்தார். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவதால் திமுக பயப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, "அமித் ஷா தமிழகம் வருவதால் பயப்படுவதாகச் சொல்கின்றனர். பாராளுமன்ற தேர்தலின்போது, மோடி தமிழகத்திற்கு எட்டு முறை வந்தார். ஒன்றும் புடுங்க முடியவில்லை. அமித் ஷா வந்து என்ன பண்ண போகிறார்?" என்று சவால் விடும் தொனியில் பேசினார்.
வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்றும், அதற்கான மக்கள் பணிகளில் தொண்டர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி தனது உரையில் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.