திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த 6 மாதங்களாக உலகையே முடக்கிப்போட்டுள்ளது. இந்தியாவில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56 லட்சத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 5.5 லட்சத்தை தாண்டி சென்றுவிட்டது.
மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசு, கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் என பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார்.
தொடர்ந்து, ஆளும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர்.
கடந்த மாதம் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பல அரசியல்வாதிகளையும் பாதித்துள்ளது. இந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து அவர் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். பரிசோதனையில், ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"