பெரியார் சிலை அகற்றப்பட்டால், மத்தியில் இருந்து பா.ஜ.க ஆட்சி அகற்றப்படும் என்று தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு புதன்கிழமை எச்சரிக்கை தெரிவித்தார்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை ஶ்ரீரங்கத்தில் என் மண், என் மக்கள் பாதயாத்திரையின்போது, “கோவில் முன்பாக கடவுள் மறுப்பு வாசகங்களுடன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை 1967-ல் தி.மு.க-தான் வைத்தது. தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி அமைந்த உடன் முதல் நொடியிலேயே இந்த கடவுள் மறுப்பு வாசகமும் சிலையும் அகற்றப்படும். இந்த இடத்தில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் சிலை வைக்கப்படும்; திருவள்ளுவர் சிலை வைக்கப்படும்” என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
அண்ணமலையின் இந்த பேச்சு குறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஶ்ரீரங்கம் கோவில் முன்பாக உள்ள தந்தை பெரியார் சிலையை அகற்றினால் மத்தியில் உள்ள பா.ஜ.க ஆட்சி தூக்கி எறியப்படும் என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்தார்.
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புதன்கிழமை சென்னை திருவொற்றியூரில் நீட் எதிர்ப்பு கையெழுத்து பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஸ்ரீரங்கத்தில் கடவுள் மறுப்பு வாசாகங்கள் உடன் தி.மு.க வைத்த சிலையை பா.ஜ.க ஆட்சி வந்த உடனே அகற்றப்படும் என்று கூறியது குறித்து ஆர்.எஸ். பாரதியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு ஆர்.எஸ். பாரதி கூறியதாவது: “அண்ணாமலை என்பவர் யார் என்பது உங்களுக்கே நல்லா தெரியும். அதாவது, இந்த மாதிரி பொய்யை சொல்லியும், தமிழ்நாட்டில் இந்த மாதிரி தேவையில்லாத கருத்துகளையும் பேசுவதும்தான் அவருடைய தொழிலாக இருக்கிறது. அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அந்தக் கல்வெட்டுகள் (ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை மற்றும் கடவுள் மறுப்பு வாசகம் பொறிக்கப்பட்ட கல்வேட்டு) அகற்ற வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வந்ததனாலேயே, இவர்கள் மத்தியில் இருந்து அகற்றப்படுவார்கள் என்பதுதான் உறுதி” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆர்.எஸ். பாரதி, “இன்னும் சொன்னால், இந்த கருத்துகளை அகற்ற வேண்டும் என்று சொன்னவர்கள் எல்லாம் அழிந்துபோய்விட்டார்கள். இந்த கருத்தை இன்றைக்கு உலகம் முழுவதும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். சோனியா காந்தியும் பிரியங்கா காந்தியும் பெரியாரைத்தான் பேசுகிறார்கள். அவர்கள் எங்களுடைய வடபுலத்து பிரச்சார சேனாதிபதிகளாக செயல்படக்கூடிய அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள்.
நேற்றைக்கு சிங்கப்பூரில் உரையாற்றிய மயில்சாமி அண்ணாதுரை, பெரியார்தான் சந்திர மண்டலத்து அறிவை ஊட்டியவர். அதுதான், தன்னை ஆராய்ச்சி செய்யத் தூன்டியது என்று கூறியுள்ளார்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“