/indian-express-tamil/media/media_files/sj64fPfiOlgOGvB2IOp8.jpg)
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று (அக்.23) ஆடவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. போட்டியை காண ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.
அப்போது மைதானத்திற்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் ஒருவர் ரசிகர்கள் கொண்டு வந்த இந்திய தேசியக் கொடியை வாங்கி அவமதிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த உதவி ஆய்வாளர் காவல் கட்டுபாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விமர்சனம் தெரிவித்துள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது X பக்கத்தில், "மைதானத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த போலீசார், மைதானத்திற்குள் இந்திய தேசியக் கொடியை எடுத்துச் செல்ல ரசிகர்களை தடை செய்ததாக குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, குஜராத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியதில் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். திமுக அமைச்சர் பொன்முடியின் மகனும் டிஎன்சிஏ தலைவருமான அசோக் சிகாமணி தனது அரசியல் பிரச்சாரத்தை ஒரு படி மேலே கொண்டு சென்று இன்று நமது நாட்டின் தேசியக் கொடியை அவமதித்துள்ளார்.
சேப்பாக்கத்தில் இன்றைய (நேற்று) போட்டிக்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. டி.என்.சி.ஏ-க்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?
தி.மு.க தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தி.மு.க அரசை கண்டித்து தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்தும்" என்று கூறினார்.
சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.