மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஆதரவாக இருந்த அதிமுக அரசை மு.க ஸ்டாலின் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராததை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சிகள் , மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தனர். இதற்கு காங்கிரஸ் உட்பட பிற எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதே நேரத்தில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவித்தது. நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 37 பேர் மக்களை உறுப்பினர்கள், 13 பேர் மாநிலங்களவை உறுப்பினர்கள். மக்களவையில் இருக்கும் 37 எம்பிகளும் மோடிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
அதிமுக அரசு சொல்லும் காரணங்கள்!
இதன்படி நேற்று மாலை மக்களவையில் நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. திட்டமிட்டப்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்றது. இதுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் அதிமுக - பாஜவுக்கு இடையே பரஸ்பர உறவு இருப்பதாக கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், “ அதிமுக அளித்துள்ள ஆதரவு நீட் தோல்வி, 15வது நிதிக்கமிஷன், ஜி.எஸ்.டி, இந்தி திணிப்பு, மதவாத அரசியல் ஆகிய பிரச்னைகளுக்கு மத்தியிலும் இரு கட்சிகளுக்கும் இடையேயான நல்லுறவை காட்டுகிறது.
தமிழகத்தில் வருமான வரிச் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குடும்பம் தங்களது குறிக்கோளில் வெற்றியடைந்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.