/indian-express-tamil/media/media_files/2025/08/19/dmk-tr-baalu-wife-tr-brajaa-mother-renuka-devi-baalu-passed-away-tamil-news-2025-08-19-11-32-50.jpg)
தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு மனைவியும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
தி.மு.க-வின் முன்னணி தலைவர்களில் ஒருவர் டி.ஆர்.பாலு. தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகேயுள்ள தளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இவர், 1957 முதல் தி.மு.க-வில் செயல்பட்டு வருகிறார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் மக்களவை எம்.பி.யாகவும் உள்ளார். 1996 முதல் சென்னை தெற்கு மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஏழு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 2018 முதல் ஜனவரி 2020 வரை தி.மு.க கட்சியின் முதன்மை செயலாளராக பணியாற்றிய டி.ஆர்.பாலு, தற்போது தி.மு.க-வின் பொருளாளராக இருந்து வருகிறார். இப்பதவிக்கு செப்டம்பர் 3, 2020 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1999 முதல் டிசம்பர் 2003 வரை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகவும், 2004 முதல் 2009 வரை கப்பல் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் மத்திய அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார்.
டி.ஆர்.பாலு, கடந்த 1970 ஆம் ஆண்டில் தனது நீண்டகால காதலியான ரேணுகா தேவியை மணந்தார். பின்னர் அதே ஆண்டில் அவரது உறவு முறைப் பெண்ணான பொற்கொடியை மணந்தார். இரண்டு மனைவிகளுக்கும் சேர்த்து டி.ஆர்.பாலுவுக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இரண்டாவது மகன் டி.ஆர்.பி. ராஜா (ரேணுகா மகன்) அவரது அரசியல் வாரிசாகக் கருதப்படுகிறார். அவர்களின் சொந்தத் தொகுதியான மன்னார்குடியில் இருந்து தொடர்ச்சியாக மூன்று முறை சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். இப்போது கட்சியில் (தி.மு.க. ஐ.டி பிரிவு செயலாளராக) மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்தில் (தொழில்துறை, ஐ.பி மற்றும் வணிக அமைச்சராக) உயர் பதவிகளை வகிக்கிறார்.
டி.ஆர்.பாலுவின் மற்ற 2 மகன்கள் செல்வகுமார் (தலைவர்), ராஜ்குமார் (தலைவர்) மற்றும் மூத்த மகள் தேவி காஞ்சனா (தலைவர்) ஆகியோர் வணிகங்கள் மற்றும் நிறுவனங்களை கவனித்துக்கொள்கிறார்கள். அதே நேரத்தில் இளைய மகள் மனோன்மணி தமிழ் செய்தி சேனல்களில் நிருபர்-பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு மனைவியும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 79.
நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இறுதிச் சடங்குகள் இன்று மாலை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.