Duraimurugan meets AP CM : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திமுக அரசியல் களம் கடந்த 1 வாரமாக பரபரப்பாக காணப்படுகிறது.காங்கிரஸ், பாஜக தவிர்த்து மூன்றாவது அணியை உருவாக்குவதற்காக தீவிர முயற்சி எடுத்து வருபவர் சந்திரசேகரராவ். ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் முக்கியமான ஒரு கட்சி திமுக. இந்த நிலையில், ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் நடத்திய சந்திப்பு அகில இந்திய அரசியலில் கூட பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சந்திப்புக்கு பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தனர். சந்திப்பு நிறைவடைந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, திமுக தலைமையிடமிருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியது. அதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான ஸ்டாலின், சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரசேகரராவை சந்தித்தால், தேவையில்லாத யூகங்கள் உருவாகும் என ஸ்டாலின் நினைத்ததாகவும், ஆனால், சந்திரசேகரராவ், தொடர்ச்சியாக நேரம் கேட்டதால், அவரை சந்திக்க ஸ்டாலின் ஒப்புக் கொண்டதாகவும், திமுக வட்டாரங்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் தனது மனைவி மற்றும் மகன் கதிர் ஆனந்துடன் இன்று ஆந்திராவுக்கு சென்றிருந்தார். வழிப்பாட்டை முடித்த அவர், தனது மகனுடன் சென்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அமராவதி தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் துரைமுருகனிடம் கேட்கும் போது, "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. ஆந்திராவுக்கு சென்றதால், தனிப்பட்ட முறையில் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இது வழக்கமான ஒன்று தான். ஆந்திர முதல்வருடன் நெருங்கிய நட்பு உள்ளது. எனவே இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை" என்று கூறியுள்ளார்.
நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்தார். இப்போது துரைமுருகன் சந்திரபாபு நாயுடுவை சந்திருப்பதவது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.