செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே நடந்த சாலை விபத்தில் பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப்(35) மற்றும் அவருடன் சென்ற ஜீவா(28) என்பவரும் உயிரிழந்தனர். ஸ்டாலின் ஜேக்கப், அவரது நண்பர் ஜீவா இருவரும் மறைமலைநகர் சிக்னல் அருகே நேற்று மாலை 3.45 மணியளவில் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு நோக்கி அதிவேகமாக வந்த டிரக் லாரி இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி இரவில் உயிரிழந்தனர்.
ஸ்டாலின் ஜேக்கப் நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப், ‘What A Karvad’ எனும் பிரபல ஆன்லைன் உணவு நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருந்துள்ளார். தி.மு.க ஆதரவாளரும் ஆவார்.
இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
புன்னகை கூட இன்னும் மறக்கவில்லை
கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கதில், “நேற்று தனது பிறந்தநாள் என என்னை சந்தித்து வாழ்த்து பெற்ற தம்பி ஸ்டாலின் ஜேகப் அவர்களின் புன்னகை கூட இன்னும் மறக்கவில்லை, அதற்குள் இத்தகு துயரச் செய்தி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.
“கலைஞரின் இறுதிப் பயணத்தை உணர்ச்சி குவியலாக காட்சிப்படுத்தியவர். கொள்ளை உறுதியோடு சமூக வலைதளங்களில் களமாடிய தம்பி ஸ்டாலின் ஜேக்கப்-இன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. கழகத்திற்கு பேரழப்பு. குடும்பத்தினர், சமூக வலைதள உடன்பிறப்புகளுக்கு என் ஆறுதல். உன் உழைப்பை என்றும் மறவோம்” என உதயநிதி ஸ்டாலின் ட்விட் பதிவிட்டுள்ளார்.
உருக்கமாக ட்விட்
தமிழச்சி தங்கபாண்டியன் எப்போதும் சிரித்த முகம், சற்றும் சோர்வில்லாத களப்பணி, சமரசமற்ற கொள்ளைப் பிடிப்பு என வலம் வந்த அன்புத் தம்பி ஸ்டாலின் ஜேக்கப்-இன் அகால மரணம் இந்த இரவைக் கொடுந்துயராக்கி விட்டது. நேற்று முன்தினம் (மார்ச் 2) பிறந்தநாள் அவருக்கு. நேற்று (மார்ச் 3) பேசலாமென இருந்தோம் என உருக்கமாக ட்விட் செய்துள்ளார்.
ஸ்டாலின் ஜேக்கப் எடுத்த புகைப்படங்களை பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து அது தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் தி.மு.க தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிரிழந்த போது அவரது இறுதி ஊர்வலத்தில் ஜேக்கப் எடுத்த புகைப்படங்கள் மக்கள் மனநிலையை பிரதிபலித்து பலரின் கவனத்தை பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/