அதிமுக அலுவலகத்தை உடைத்து அங்கிருந்த ஆவணங்களை ஓ.பி.எஸ்., தரப்பு கூட்டம் எடுத்து சென்றதாக குற்றசாட்டு எழுந்தது. அதை விசாரித்து எடுத்து செல்லப்பட்ட ஆவணங்களை நீதிமன்ற உத்தரவுகீணங்க எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆவணங்களை அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம் பெற்றுக்கொண்டார்.
அதிமுக-வில் சமீப காலமாக நடைபெறும் ஒற்றை தலைமை மோதலினால் பிளவு ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என்று இரண்டு அணிகளாக பிரிந்தது.
இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி காலை ஈ.பி.எஸ்., தரப்பில் பொதுக்குழு நடைப்பெற்றது. அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலக பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை வாகனத்தில் எடுத்து சென்றனர்.
அன்றைய தினம் ஓபிஸ், இபிஎஸ் தரப்பினர் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதலில் ஓ.பி.எஸ் தரப்பினர் கட்சியின் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு புகார் அளித்தது.
இதைப்பற்றி விசாரணை நடத்தியதில், அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களை எல்லாம் ஓ.பி.எஸ் தரப்பினர் சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் பொருட்களையும் மனுதாரர் சி.வி சண்முகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.