மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவிற்கு சுற்றி திரியும் நிலையில் பொதுமக்களை கடித்து காயம் ஏற்படுத்துவதோடு ஏராளமான சிறுவர் சிறுமியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி மாமன்ற கூட்டங்களின்போது மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவிற்கு நாய்களின் நடமாட்டம் இருப்பதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை சத்தியசாய் நகர் பகுதியை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலரான N.G.மோகன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாய்கடி பாதிப்பு சிகிச்சை குறித்த விவரங்கள் கேட்டு மனு அளித்திருந்தார்.
அதனால் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2020 ஜனவரி 1 முதல் 2024 நவம்பர் மாதம் வரை நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் நாய் கடியால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை கேள்வியாக கேட்டிருந்தார். அதற்கு அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அளித்துள்ள பதிலில் :
கடந்த 2020 ஆண்டு 30,168 பேர் உள் நோயாளியாகவும் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் ஒருவர் நாய்க்கடியால் ரேபிஸ் நோயல் இறந்ததாகவும், 2021 ஆம் ஆண்டு 29 ஆயிரத்து 100 பேர் சிகிச்சை பெற்றதில் 5 பேர் நாய் கடியால் ரேபிஸ் நோய் வந்து இறந்ததாகவும் , 2022 ஆம் ஆண்டு 30,391 பேர் சிகிச்சை பெற்றதில் 5 பேர் நாய் கடியால் ரேபிஸ் நோயால் இறந்ததாகவும், 2023 ஆம் ஆண்டு சிகிச்சை பெற்றதில் 23,741 பேர் சிகிச்சை பெற்றதில் 11 பேர் நாய்க்கடியால் ரேபிஸ் நோயால் இறந்ததாகவும் , 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 20,123 பேர் சிகிச்சை பெற்றதோடு அதில் 10 பேர் ரேபிஸ் நோயால் இறந்ததாகவும் பதில் அளித்துள்ளனர்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 1லட்சத்தி 33 ஆயிரத்து 523 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ரேபிஸ் நோயால் 32 நபர்கள் உயிரிழந்தள்ளதாகவும் ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து பேசிய ஆர்.டி.ஐ ஆர்வலர் மோகன் மதுரை மாநகராட்சி பகுதிகளில் அதிகளவிற்கு தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர் எனவும் தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை சிகிச்சை அதிகளவிற்கு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மாநகராட்சி தரப்பில் அதிகளவிற்கு கருத்தடை செய்வதாக கூறினாலும் கூட தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை குறித்து உடனடியாக கணக்கீட்டு ஆய்வு நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய விலங்குகள் நல ஆர்வலர் சாய் மயூரி பேசியபோது : மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நாய்களின் எண்ணிக்கை குறித்து உடனடியாக கணக்கீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு நாய் கால்கள் பட்டு தேய்ந்து லேசான காயம் ஏற்பட்டால் கூட உடனடியாக சிகிச்சை கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
நாய் கடிகள் மற்றும் ரேபிஸ் பரவக்கூடிய விலங்குகள் கடித்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்து தேசிய அளவிலான அவசரகால உதவி மையம் செயல்படுகிறது எனவும் தெரு நாய் கடித்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக சிகிச்சை பெறுவது குறித்து பொதுமக்களுக்கும் சிறுவர்களுக்கும் உரிய விழிப்புணர்வு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியக்கூடிய பெண் நாய்களுக்கு அதிக அளவில் கருத்தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.