/tamil-ie/media/media_files/uploads/2018/10/dr-krishnasamy.jpg)
Dr krishnasamy aiadmk alliance, டாக்டர் கிருஷ்ணசாமி, முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி
அதிமுக அணிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி தயாராகிவிட்டதாக பேச்சு எழுந்திருக்கிறது. இதற்கு காரணம், அவரது திடீர் அறிக்கை.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகாரை விசாரிக்குமாறு, சி.பி.ஐ.க்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 12-ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும் சி.பி.ஐ. விசாரணையை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அக்டோபர் 29-ம் தேதி நடைபெற்றது.மேல்முறையீடு குறித்து பதிலளிக்க தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், முதல்வர் மீதான சி.பி.ஐ. விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்தது.
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகாரை சி.பி.ஐ. விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தடை விதித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை எப்படியும் பதவியை விட்டு இறக்க வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு ஒரே வாரத்திற்குள் இது இரண்டாவது பெரிய சம்மட்டி அடியாகும்!" என்று கூறியுள்ளார்.
அதாவது, 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு விவகாரத்தில் எதிர்கட்சிகளுக்கு முதல் சம்மட்டி அடி என்றும், சிபிஐ விசாரணை தடை விவகாரத்தை இரண்டாவது சம்மட்டி அடியாகவும் கிருஷ்ணசாமி குறிப்பிடுகிறார்.
டாக்டர் கிருஷ்ணசாமி சமீபகாலமாக திமுக மீது கடுமையான தாக்குதலை முன்வைத்து வருகிறார். பாஜக.வுக்கு ஆதரவாக அவர் இயங்கி வருவதாக விமர்சனங்கள் இருந்த நிலையில், முதல் முறையாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பகிரங்கமாக அவர் கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே டாக்டர் கிருஷ்ணசாமி, மீண்டும் அதிமுக அணிக்கு திரும்ப முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.