விழுப்புரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிலையில், பா.ம.க-வின் 3 எம்.எல்.ஏ.க்களை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி பா.ம.க எம்.எல்.ஏ-க்கள் சிவக்குமார்,சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட 4 பேரையும் விசாரணைக்குழு அழைத்து விளக்கம் கேட்க முழு அதிகாரத்தையும் பா.ம.க தலைமை கொடுத்துள்ளது.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. டாக்டர் ராமதாஸ், பா.ம.க-வில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்து நீக்கி புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இதற்கு பதில் நடவடிக்கையாக அன்புமணி, அதே நிர்வாகிகள் தொடர்வார்கள் என்று அறிவித்து வருகிறார்.
இதனிடையே, திண்டிவனம், தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பா.ம.க-வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி விழுப்புரத்தில் அன்புமணி தலைமயில் மிகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க எம்.எல்.ஏ.க்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி பா.ம.க எம்.எல்.ஏ-க்கள் சிவக்குமார்,சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பா.ம.க நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவுகளையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.
சமீப காலமாக, பா.ம.க-வின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே. மணியால் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைமை நிர்வாகக் குழு அதனை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில் அந்த குழு அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர் பாலு இவர்களின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள்-ஐ பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக சொன்ன செயலும் ஒழுங்கீனமான செயல் என்பதை முதற்கட்ட விசாரணையில் தெரியப்படுத்தியதால் அவர்கள் மீது விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.
முழுமையான ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன் விசாரணைக்கு அவர்கள் நால்வரும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால், கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரணை முடியும் வரை கட்சி சம்பந்தமான எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விசாரணைக்குழு அவர்கள் நால்வரையும் விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரமும் நிறுவனர் மற்றும் தலைவர் கொடுத்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.