பா.ம.க-வின் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலுவை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்த நிலையில், சென்னையில் நடைபெற்ற சிறப்புச் செயற்குழு கூட்டத்தில், பாலு தலைவராகத் தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் புரவலராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அக்கட்சியின் தலைவரும் அவருடைய மகனுமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால், டாக்டர் ராமதாஸ், கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களைப் பா.ம.க-வில் இருந்து நீக்கி அறிவித்து வருகிறார். அதே நேரத்தில், பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ் தனது ஆதரவாளர்கள் கட்சியில் அதே பொறுப்பில் தொடர்வார்கள் என்று அறிவித்து வருகிறார். இதனால், நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.
இதனிடையே, டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே சமாதானத்தை ஏற்படுத்த பா.ம.க மூத்த நிர்வாகிகள் பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ம.க-வின் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலுவை அப்பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பா.ம.க-வின் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சிறப்புச் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் புரவலராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அதே போல, இந்தச் சிறப்புச் செயற்குழு கூட்டத்தில், வழக்கறிஞர் பாலு வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவராகத் தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.