Advertisment

காக்கை வன்னியர்களைத் தெரியுமா? திமுக.வை துளைக்கும் ராமதாஸ் ட்வீட்

'இட ஒதுக்கீட்டுக்காக போராடி இன்னுயிர் நீத்த சத்திரிய வன்னியர்களை உங்களுக்குத் தெரியும்.... காக்கை வன்னியர்களைத் தெரியுமா?’

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ramadoss, ramadoss twitter, pmk ramadoss, dr.ramadoss, pattali makkal katchi, dmk, stalin, twitter, ராமதாஸ், திமுக, ஸ்டாலின், டுவிட்டர், கனவு, பாமக

ramadoss, ramadoss twitter, pmk ramadoss, dr.ramadoss, pattali makkal katchi, dmk, stalin, twitter, ராமதாஸ், திமுக, ஸ்டாலின், டுவிட்டர், கனவு, பாமக

திமுக- பாமக இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது. டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட ‘ட்வீட்’டில், ‘காக்கை வன்னியர்களைத் தெரியுமா?’ என திமுக.வை கடுமையாக சாடினார்.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வருகிற 21-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. இந்தத் தொகுதியின் வன்னியர் சமூக வாக்கு வங்கியை குறி வைத்து அரசியல் காய் நகர்த்தல்கள் நடக்கின்றன. பாமக தற்போது அதிமுக அணியில் இருப்பதால், அந்த வாக்குகளை கவர முடியும் என நம்புகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘வன்னியர்களுக்கு 20% உள் இடஒதுக்கீடு, வன்னியர் சமூக தலைவர்களில் ஒருவரான ஏ.கோவிந்தசாமிக்கு நினைவு மண்டபம், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிகளுக்கு நினைவு மண்டபம் ஆகியன திமுக ஆட்சிக்கு வந்தது நிறைவேற்றிக் கொடுக்கப்படும்’ என அறிவித்தார். விக்கிரவாண்டியில் இதை பிரசாரமாகவும் திமுக முன்னெடுத்தது.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வியடைவது மட்டுமின்றி, வைப்புத் தொகை கூட வாங்க முடியாதோ என்ற அச்சம் தான் ஸ்டாலினை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என்பது உள்ளிட்ட புரட்டான வாக்குறுதிகளை வழங்கி, ஏழை மக்களை ஏமாற்றி கடனாளிகள் ஆக்கிய ஸ்டாலின், இப்போது விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை சுரண்டும் நோக்குடன் பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளார்.

வேலூர் தொகுதி தேர்தலின் போதே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது என்பதைக் கூட உணராமல் கற்பனையில் மிதக்கிறார் மு.க.ஸ்டாலின்.’ என கடுமையாக சாடினார் ராமதாஸ்.

இதற்கு பதிலடியாக அதே வன்னியர் சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரான கடலூர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மூலமாக இன்று அறிக்கை விட்டது திமுக. அதில், ‘மருத்துவரய்யா கோபப்படும் அளவிற்கு எங்கள் கழகத் தலைவர் என்ன சொல்லி விட்டார்? தி.மு.க. ஆட்சியில் வன்னியர் சமுதாய மக்களுக்கு செய்த சாதனைகளை விளக்கினார். போராட்டமே செய்யாமல் ஆலிவர் ரோட்டிற்கு டாக்டர் அய்யாவை அழைத்துப் பேசி இட ஒதுக்கீடு வழங்கியதை சொன்னார். வன்னியர் சமுதாய அதிகாரிகளை கல்வித்துறையிலும், காவல்துறையிலும் உயர் பதவியில் வைத்து அழகு பார்த்ததைச் சொன்னார்.

வன்னியர் சமுதாயப் பெருமைகளை பேசியதற்காக மருத்துவய்யா இப்படி கோபித்து- கொந்தளிப்பது ஏன்? தன்னை ஜெயிலில் போட்டவர்களுக்கும்- உடல்நிலை குன்றிப் போன நிலையிலும் அண்ணன் காடு வெட்டி குருவை அங்கும் இங்கும் பழுதான போலீஸ் வேனில் இழுத்தடித்தாரே - அந்த அதிமுகவிற்கு ஆதரவு திரட்டவா?

“ஒவ்வொரு நீதிமன்றமாக அலைகழிப்பதற்கு பதில் என்னை ஒரே விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள்” என்று ராயப்பேட்டை மருத்துவமனை வாசலில் கதறினாரே அண்ணன் காடுவெட்டி – அந்த அதிமுக ஆட்சிக்கு ஆதரவு திரட்டவா? அல்லது, உங்களையும், குருவையும் கொடுமைப்படுத்திய அதிமுகவுடன் வைத்துள்ள கூட்டணி பாசமும், தைலாபுர விருந்தின் “மகத்துவமும்தான்” இந்த கொந்தளிப்பிற்கு காரணம் என்றால் அதற்கு எங்கள் கழகத் தலைவர் பொறுப்பாக முடியாது. அதிமுகவிற்கு விருந்து வையுங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அப்படி விருந்து வைத்ததற்காக வன்னியர் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு அரிய திட்டங்களை நிறைவேற்றிய தி.மு.க.வை கொச்சைப்படுத்தாதீர்கள்.

உங்களை மட்டுமின்றி - பா.ம.க. நிர்வாகிகள் பலர் மீதும் பொய் வழக்குப் போட்டு நீதிமன்றங்களின் படிகட்டுக்களில் இன்றைக்கும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் நிலையை ஏற்படுத்திய அதிமுகவிற்கு சாமரம் வீசுங்கள். ஆனால் உங்கள் மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்கிக் கொடுத்த தி.மு.க.வை வம்புக்கு இழுக்காதீர்கள். ஆனால், சமூக நீதிக்காக போராடிய மருத்துவரய்யா அவர்கள் இன்றைக்கு யார் யாருக்கு எல்லாம் காவடி தூக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார் என்பதைப் பார்க்கும் போது என்னைப் போன்றோருக்கு வேதனையாகத்தான் இருக்கிறது.

“உங்களின் சொந்த லாபத்திற்காக எங்களை அடகு வைத்தது போதும்” என்று வன்னியர் சமுதாய மக்கள் என்றைக்கோ உங்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டார்கள். தி.மு.க.வை கூட்டணியை விட்டு சென்றதில் இருந்து தோல்வி மேல் தோல்வியை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். தங்களின் அருமைப் புதல்வரை தர்மபுரியில் தோற்கடிக்கப்பட்ட போதே பாராளுமன்றத் தேர்தலில் தங்களது பொருந்தாக் கூட்டணிக்கு வன்னியர் சமுதாயம் தக்க பதிலடி தந்து விட்டது. இன்னொரு பதிலடி விக்ரவாண்டி தொகுதியில் கிடைக்கப் போகிறது. அதனால்தான் இப்போது தி.மு.க.வின் மீது வன்னியர் சமுதாயத்திற்கு இருக்கும் பற்றுதலை உடைக்க ஏதோ பழங்கதைகளை கட்டவிழ்த்து விடுகிறீர்கள்.

எங்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் “போராட்டங்கள்” ஏதுமின்றி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தியவர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு அளித்தவர். வன்னியர் சமுதாயத்தின் சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டிற்காக தினம் தினம் யோசித்து ஆட்சியிலிருந்த போதெல்லாம் அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றியவர்.

அதை வேண்டுமென்றால்- ஒரு தனி மேடையில் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். ஒரு வேளை நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் அருமைப் புதல்வரை அனுப்பி வையுங்கள். வன்னியர் சமுதாயத்திற்கு நன்மை செய்தது அதிமுகவா அல்லது தி.மு.க.வா என்று ஒரு விவாதத்தை நடத்திப் பார்ப்போம்.

என்னைப் போன்று எத்தனையோ வன்னிய சமுதாயத்தினரை சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக - ஏன் மத்திய அமைச்சராக உயர் பதவியில் பார்த்து அழகு பார்த்தவர் எங்கள் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.

திரு ஏ.ஜி. அவர்கள் உங்களுக்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர். அவருக்கு பெருமை சேர்க்க எங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அது பற்றி இதுவரை தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த காலத்திலாவது நீங்கள் வாய் திறந்து கேட்டதுண்டா? ஏனென்றால் இந்த சமுதாயத்தில் வேறு யாருக்கும் சிறப்பு சேர்ப்பது தங்களுக்குப் பிடிக்காது. அதற்காக தி.மு.க. பொறுப்பாக முடியாது.

கட்சி துவங்கியதில் இருந்து தாங்கள் தனது குடும்பத்திற்காக மட்டுமே கூட்டணி வைத்ததை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள். தனது குடும்பத்திற்காகவே ராஜ்ய சபை பதவி கேட்டுப் பெற்றதை நினைவில் வைத்துள்ளார்கள். பாராளுமன்ற தேர்தலில் தனது மகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே வைத்த கூட்டணிகளை ஞாபகத்தில் இந்த சமுதாயம் வைத்திருக்கிறது. தங்களைப் பற்றியும் - தாங்கள் இந்த வன்னியர் சமுதாயத்தைப் பயன்படுத்தியது பற்றியும் வெளிவந்த புத்தகங்கள் இன்னும் என் அலமாறியில்தான் இருக்கின்றன.

உங்கள் அருமை புதல்வரை 2016-ல் முதல்வராக்க முயற்சித்து தோற்று நிற்கின்ற விரத்தியில் தங்களுக்கு பொருந்திய பழமொழியை எங்கள் கழகத் தலைவர் பக்கம் தயவு செய்து திருப்பி விடாதீர்கள். அதை நான் திருப்பிச் சொன்னால் டாக்டர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு கற்றுத் தந்த பண்பாட்டிலிருந்து தவறுவதாகும். அதற்கு மாறாக வேறு பழமொழியை உங்களுக்கு நான் சொன்னாலும் எங்கள் கழகத் தலைவர் கற்றுத் தந்துள்ள நாகரீகத்திற்கு புறம்பானதாகும்.

ஆகவே எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் போவது நிச்சயம். அது கனவல்ல- நிஜம். அப்போது தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் எப்படி வன்னியர் சமுதாயத்திற்காக பல்வேறு அரிய சாதனைகளை செய்தாரோ, அதே போல் பல சாதனைகளை மட்டுமின்றி- அறிக்கை வாயிலாக கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி- வன்னியர் சமுதாயத்திற்கு எங்கள் கழகத் தலைவர் பெருமை சேர்ப்பார். அந்த காட்சிகளை நீங்களும் காண்பீர்கள்! அப்போது நீங்கள் உணர மறுத்தாலும்- வன்னியர் சமுதாயப் பெருமக்கள் நன்கு உணருவார்கள் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.’ என நீண்ட அறிக்கை விட்டார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

இதற்கு பதிலடியாக டாக்டர் ராமதாஸ் இன்று ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், ‘இட ஒதுக்கீட்டுக்காக போராடி இன்னுயிர் நீத்த சத்திரிய வன்னியர்களை உங்களுக்குத் தெரியும்.... காக்கை வன்னியர்களைத் தெரியுமா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார். திமுக.வுக்கு ‘காக்கா’ பிடிப்பதாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை கேலி செய்து இந்த ட்வீட்டை ராமதாஸ் வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக- பாமக மோதல் வட மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Mk Stalin Dmk Dr Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment