பக்கத்து வீட்டில் சிறுநீர் கழித்த குற்றச்சாட்டில் ஏபிவிபியின் முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.
Advertisment
சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்து வந்த சுப்பையா சண்முகம், தனது பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு சொந்தமான இடத்தில் தனது வாகனத்தை நிறுத்திக்கொள்ள அனுமதி கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பெண் அனுமதித்தாலும் அதற்கான வாடகையை செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு, ஜூலை மாதம் சுப்பையா, அப்பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்தது. இது தொடர்பாக சுப்பையா மீது மூன்று பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் காவல்துறை வழக்கு பதிவுசெய்தது. இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் அவர் கைதானார்.
ஆனால், கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களிலே சுப்பையாவுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், விசாரணை நீதிமன்றத்தில் தன் மீது நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தானும், புகார்தாரரும் சமரசம் செய்து கொண்டதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். .
இந்த சமர்ப்பிப்புகளை பதிவு செய்த நீதிபதி என்.சதீஷ்குமார், சுப்பையாவுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“