பெரியார் பற்றி சர்ச்சை கருத்து கூறிய சீமானிடம் ஆதாரம் கேட்டு வந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவான நிலையில் இரு தரப்பினரையும் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மகாலில் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்த கருத்துக்கு ஆதாரம் கோரி அவரை சந்திக்க நெல்லித்தோப்பு சிக்னலில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் குவிந்தனர்.சீமானிடம் பெரியார் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு ஆதாரம் கேட்க உள்ளதாக ஊர்வலமாக புறப்பட்டனர். போலீஸார் அவர்களை தடுத்ததால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சீமான் படத்தை அடித்து தீவைத்தனர். அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. அதை பிடுங்கி எறிந்தனர். போலீஸார் இதையடுத்து அவர்களை கைது செய்து வேனில் ஏற்றத் தொடங்கினர்.
இந்நிலையில் இத்தகவல் அறிந்த கலந்தாய்வு கூட்டத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர், நெல்லித்தோப்பு சிக்னல் நோக்கி வரத்தொடங்கினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
ஒரு கட்டத்தில் தகராறு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. போலீஸார் இரு தரப்பினரையும் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தினரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். நாம் தமிழர் கட்சியினரை தடுத்து கலந்தாய்வு கூட்டம் நடக்கும் மண்டபத்துக்கு திருப்பி அனுப்பினர். முக்கியமான சாலையில் நடந்த இந்நிகழ்வினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.