கோவையின் அமைதியை சீர்குலைக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி, திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த மாதம் 23 ஆம் தேதி கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இதையும் படியுங்கள்: மதம் வைத்து அரசியல் செய்பவரை… பதம் பார்க்க வந்தவரே; கோவையில் மக்கள் நீதி மய்யம் போஸ்டர்
இதற்கு தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் டி.ஜி.பி சைலேந்திரபாபு எதிர் கருத்து தெரிவித்திருந்தார். அதே போல திராவிட இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இயக்கங்கள் அண்ணாமலையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் இன்று திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் தமிழ்நாடு அரசின் காவல்துறையையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும், அவதூறாக பேசி, கோவையின் ஒற்றுமை, அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பெரியவர்கள் என 70-க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி கண்டனங்களை தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil