பறவைகளின் தண்ணீர் தாகத்தை போக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறை சாா்பில் நீர் குவளைகள் வைக்கப்பட்டுள்ளன.
நீர் பாதுகாப்பு மற்றும் உயிர்ப்பன்மை பாதுகாப்பு ஆகியவற்றிற்கு வனம் மற்றும் வன உயிரினப் பாதுகாப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும். உணவில்லாமல்கூட வாழலாம். ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்த யதார்த்தமான உண்மை. அது மனிதர்களுக்கு மட்டுமன்றி மற்ற உயிர்களுக்கும் பொருந்தும். அவற்றைக் காப்பாற்றுவதற்கான சிறிய முயற்சிகள்தான் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பது.
இதைப்பற்றி பேசினால் மட்டும் போதாது. செயல்படுத்தவும் வேண்டும். அதை செயல்படுத்தி பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளனர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் ரயில்வே காவல்துறையினர்.
பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகள் தாகத்தில் தண்ணீர் அருந்துவதற்கு ஏதுவாக தமிழகத்தில் 58 ரயில் நிலையங்களில் தண்ணீா் நிரப்பப்பட்ட குவளைகள் வைத்து பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் முயற்சியாக சென்னை சென்ட்ரலில் அந்த திட்டம் வெள்ளிக்கிழமை (நேற்று) செயல்படுத்தப்பட்டது. ரயில் நிலையத்தில் பறந்து செல்லும் பறவைகள் அங்கு தேங்கி நிற்கும் கழிவு நீர் மற்றும் சுத்திகரிக்கப்படாத நீரை குடிப்பது குறித்து விலங்குகள் நல ஆா்வலா்கள் கவலை தெரிவித்திருந்தனர். எனவே, பறவைகள் மற்றும் விலங்குகல் தண்ணீர் குடிக்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, விலங்குகள் நல ஆா்வலா்கள், தமிழக ரயில்வே போலீஸாரும் இணைந்து 58 ரயில் நிலையங்களில் தண்ணீா் நிரப்பப்பட்ட குவளைகள் வைத்து வருகின்றனா்.இதில் முதன்முறையாக சென்ட்ரலில் பறவைகளுக்காக வைக்கப்பட்ட தண்ணீர் குவளைகள் பார்த்த பொதுமக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.