சென்னை நீலங்கரை அருகில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியின் மீது அவ்வழியாக திருவான்மியூரில் இருந்து கோவளம் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அரசு பேருந்தின் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நீலாங்கரையை தாண்டி சாலையோரம் பேருந்து நிற்பதை கண்டுபிடித்தனர். அதன் டிரைவர் பஸ்சில் உறங்கி கொண்டிருந்ததையடுத்து விபத்து குறித்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அரசு பேருந்தின் டிரைவரே இல்லை என தெரியவந்துள்ளது.
மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சென்னை பெசன்ட்நகரைச் சேர்ந்த ஆபிரகாம் எனவும் இவர் அரசு பஸ் டிரைவர் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
ஆபிரகாம் நேற்று இரவு அரசு பேருந்து ஒன்றில் பயணித்துள்ளார். அப்போது பேருந்தின் நடத்துநர் சில்லறை பாக்கி விஷயத்தில் ஆப்ரஹாமை மரியாதைக்குறைவாக நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆப்ரஹாம் கோபத்தில் மது அருந்திவிட்டு திருவான்மியூர் பேருந்து நிறுத்துமிடத்திற்கு வந்து தன்னை தரகுறைவாக நடத்திய நடத்துநரை பலிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாருக்கும் தெரியாமல் அங்கு நின்ற ஒரு பஸ்சுக்குள் புகுந்து சத்தமே இல்லாமல் ரகசியமாக பேருந்தை திருடி மகாபலிபுரம் நோக்கி பஸ்சை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.
அப்போதுதான் லாரி மீது பஸ்சை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்த நிலையில் போதை தெளிந்த பிறகு ஆபிரகாமிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.