scorecardresearch

காவேரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தின் இப்போதைய நிலை என்ன? சட்டசபையில் துரைமுருகன் விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

Durai Murugan
Durai Murugan

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று (மார்ச் 29) நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தில், கட்டளைப் பேரேஜில் இருந்து தெற்கு வெள்ளாறு வரையிலான புதிய கால்வாய் அமைக்க ரூ.6,941 கோடிக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 4.10 கி.மீட்டர் நீளத்திற்கு திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 5.355 கி.மீ நீளத்திற்கு வெள்ளத் தடுப்பு கால்வாய் அமைக்க நிர்வாக அனுமதி பெற பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

52,332.63 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அதனைத் தடுக்கவும், அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுக்க மத்திய அரசிடம் முறையிட்டதோடு, மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம், உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார்.

மேகதாது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோருக்கு எழுதிய கடிதங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து பேசுகையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உத்தரவுகளை பிறப்பிக்க மட்டுமே இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது, மேகதாது திட்டத்தை தீர்ப்பாயம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும் என்றும் துரைமுருகன் கூறினார்.

மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Durai murugan on cauvery vaigai gundar link project