/tamil-ie/media/media_files/uploads/2020/03/stalin-durai-murugan.jpg)
durai murugan resigned dmk treasury, மு.க.ஸ்டாலின், திமுக, துரைமுருகன், துரைமுருகன் திமுக பொருளாளர் பதவியில் இருந்து விலகல், mk stalin announced dmk general body meeting, திமுக பொதுக்குழு கூட்டம், திமுக பொதுச்செயலாளர் தேர்வு, dmk elect dmk general secretary, dmk elect treasry post, anna arivalayam, chennai, mk stalin
திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துரைமுருகனின் பதவி விலகலை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் மார்ச் 7-ம் தேதி காலமானார். அவருடைய மறைவைத் தொடர்ந்து, திமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து திமுகவின் பொதுக்குழு வருகிற மார்ச் 29-ம் தேதி கூடி அன்று திமுகவின் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
திமுகவின் பொருளாளர் பதவி வகிக்கும் துரைமுருகன் மூத்த தலைவர் என்ற அடிப்படையில், திமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில், திமுகவில் ஒரு தரப்பு ஆ.ராசாவை திமுக பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில், துரைமுருகன், வருகிற 29-ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் தான் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதை ஏற்பதாகவும் 29-ம் தேதி கூடும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக மார்ச் 29-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மார்ச் 16-ம் தேதி கடிதத்தின் வாயிலாக கழகப் பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விழைவதாகவும் அவர் தமது பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக்கொள்கிறேன்.
எனவே மார்ச் 29-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம், துரைமுருகன் திமுக பொதுச்செயலாளராவது உறுதியாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.