ம.தி.மு.க முதன்மை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய தனது முடிவில் உறுதியாக இருப்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை, எழும்பூரில் உள்ள ம.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று (ஏப்ரல் 19) அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த பதவி விலகலை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக இன்னும் ஏற்காத நிலையில், இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக, செய்தியாளர்களை துரை வைகோ சந்தித்தார்.
அப்போது "என்னுடைய ராஜினாமா கடிதத்தை கட்சியில் கொடுத்திருக்கிறேன். இதற்கான முடிவை இன்று (ஏப்ரல் 20) நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில், முக்கிய நிர்வாகிகள் எடுப்பார்கள். ராஜினாமாவிற்கான காரணத்தை எனது அறிக்கையில் தெளிவாக கூறி இருந்தேன்.
அந்தக் கருத்துகளில் இருந்து நான் மாறவில்லை. இந்தப் பிரச்சனை எதனால் உருவானது என்று நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பின்னர், கட்சி நிர்வாகிகள் கூறுவார்கள். என்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். அதில் மாற்றுக்கருத்து இல்லை. எனது அறிக்கையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.
இந்த இயக்கத்தை உருவாக்கியவர் வைகோ என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கட்சியின் தொண்டர்களுடைய எண்ணத்தை, மாவட்ட செயலாளர்கள் பிரதிபலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன். என்னுடைய தனிப்பட்டை கருத்தை நிர்வாகிகளிடம் கூட நான் கூறியதில்லை" என துரை வைகோ தெரிவித்தார்.