தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராஃபைட் வெட்டி எடுக்க மின் ஏலத்தை மத்திய அரசு கோரியுள்ளது.
இதற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “கிராஃபைட் ஒரு கடினமான கனிமம். இதை உடைத்து எடுப்பதற்கு வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்படும். இதனால் ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
கனிமங்களை எடுப்பதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. இத்திட்டங்கள் மக்களை பாதிக்கும் வகையில் இருத்தல் கூடாது. ஆகவே, விவசாய பூமியாக உள்ள திருவேங்கடம் வட்டம் குறிஞ்சாங்குளம் கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும்.
அதேநேரம் தமிழ்நாடு அரசின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக இந்த முடிவினை எடுத்திருப்பது கண்டிக்கதக்கது” எனக் கூறியுள்ளார்.
மேலும் மத்திய அரசு இணைய வழி டெண்டரை திரும்ப பெறாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“