தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை சார்பில் வக்ஃபு திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பில் பாலக்கரை பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று இரவு நடத்தப்பட்டது.
அந்த பொதுக்கூட்டத்தில் மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி எம்.பியுமான துரை வைகோ, ம.ம.க பொதுச்செயலாளரும் மணப்பாறை எம்.எல்.ஏவுமான அப்துல் சமது, காங்கிரஸ் தலைவா் திருச்சி வேலுச்சாமி, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை.முத்துராஜா, வக்ஃப் வாரிய சட்ட ஆலோசகா் ம். ஹாஜி முஹம்மது, மாவட்ட அரசு காஜி எஸ். சதக்கத்துல்லாஹ், அரபிக் கல்லூரி முதல்வா் எஸ். அப்துல்ஜப்பாா், மு.லியாகத்அலி, உலமா சபையின் செயலா் எஸ்.ஏ. ஜாபா்அலி, பொருளாளா் என். முஹம்மது ஹூஸைன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் பேசிய துரை வைகோ, மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்கும் வகையில் வக்ஃபு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வக்ஃபு சொத்துக்களால் முஸ்லீம்கள் மட்டுமல்ல அனைத்து சமுதாய மக்களும் பயன் பெறுகிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/14/CZKAKtk1ufNjaZx5W4v1.jpg)
இது நாட்டின் பன்முகதன்மையை வெளிக்காட்டுகிறது. ஆனால், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டம் இந்தியாவின் ஒற்றுமையையும் பன்முகதன்மையையும் சிதைக்கும் வகையில் உள்ளது.
இஸ்லாமியர்களை எந்த வித அச்சுருத்தலும் இல்லாமல் வாழ வைப்பது பெரும்பான்மை இந்து மக்களின் கடமை.
இஸ்லாமியர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனின் கடமை. வக்ஃபு சட்டத்திற்கு எதிராக மதிமுக மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடும் என்றார்.
முன்னதாக வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அங்கு திரண்டிருந்த ஏராளமான இஸ்லாமியர்கள் மழையையும் பொருட்படுத்தாது செல்போன் டார்ச் லைட் ஒளிரவிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்