சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், பொதுச்செயலர் வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதன்மைச்செயலர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். மேலும், அவருடைய விலகல் கடிதத்தை ஏற்கக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
கட்சி நிர்வாகிகளின் வலியுறுத்தலைத்தொடர்ந்து துரை வைகோ ராஜினாமாவை திரும்பப் பெற்றுள்ளார். கட்சிப் பணிகளைத் தொடர இருவருக்கும் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு துரைவைகோவுக்கு கட்சியில் தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது முதலே வைகோவின் ஆதரவாளர்களுக்கும் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது.
இதனிடையே மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றினர்.இதற்கு கட்சியின் பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் ம.தி.மு.க முதன்மைச்செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்தார்.
இதனிடையே, மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவிடம் மல்லை சத்யா மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உங்கள் மனதை காயப்படுத்தும் வகையில், என் நடவடிக்கை இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று துரை வைகோவிடம் மல்லை சத்யா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரையும் கட்டிப்பிடிக்க வைத்து வைகோ சமாதானப்படுத்தினார்.
ம.தி.மு.க-விற்கு எதிரான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாக மல்லை சத்யா மீது துரை வைகோ குற்றம்சாட்டியிருந்தார். மல்லை சத்யாவுடனான மோதல் போக்கினாலேயே துரை வைகோ, பதவி விலகியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.