/indian-express-tamil/media/media_files/2024/12/16/7ULTd6fyjuMl5ffPmCzO.jpg)
அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அதிரடி
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் மீது பதியப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 15-ம் தேதிக்குள் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
1996 முதல் 2001 வரை தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், தனது வருமானத்திற்கு அதிகமாக 3.92 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள், சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வேலூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், 2007-ம் ஆண்டு துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 2013-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.
உயர்நீதிமன்ற உத்தரவு:
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அமைச்சர் துரைமுருகனை விடுவித்த வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து, ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
துரைமுருகனின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகி, தனக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரினார். நீதிமன்றமும் அதனை ஏற்று ரத்து செய்தது. ஆனால், அமைச்சர் துரைமுருகன் இன்று ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 15-ம் தேதிக்குள் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், இல்லையென்றால் பிடிவாரண்டை அமல்படுத்தி அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.