பா.ஜ.க.,வாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும், மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர் என தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, மேகதாது கட்டுவது தொடர்பான பிரச்சனையில் காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கண்டித்து தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடந்து இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய பல்வேறு கட்சித் தலைவர்களும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர்.
இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசினார். அப்போது, ”காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கர்நாடகாவின் மேகதாது அணை குறித்து விவாதிக்கவே கூடாது என தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசு பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் நீர்வளத் துறையும் மேகதாது அணை தொடர்பாக மேலாண்மை ஆணையம் விவாதிக்க கூடாது என வலியுறுத்தியது.
மேகதாது விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் இறுதியானது. நீர் பங்கீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை காவிரி ஆணையத்தில் தலைவர் இல்லாததால் பிரச்சினை வரவில்லை. கடந்த 1ஆம் தேதி நடந்த கூட்டத்தில், மேகதாது குறித்து பேசப்படாது என்று தெரிவித்திருந்தார்கள். கடந்த 1ஆம் தேதி நடந்த கூட்டத்தில், வழக்கம்போல், கர்நாடகா மேகதாது பிரச்சினையை எழுப்பினார்கள். மேகதாது விவகாரத்தில், வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வேறு, அதன் அறிக்கையில் இருந்த தகவல்கள் வேறு.
தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது. மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடகா அரசு பேசலாம். ஆனால் செயல்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் பிறந்த யாரும் மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டார்கள். மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட கர்நாடக அரசு வைக்க தி.மு.க அரசு அனுமதிக்காது. பா.ஜ.க.,வாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும், மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர்.
மேகதாது அணை குறித்து யாரும் அஞ்ச தேவையில்லை. மேகதாது அணை கட்டுவதை தமிழகத்தை சேர்ந்த எந்த கட்சியும் அனுமதிக்காது. மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ள அதே அக்கறை எங்களுக்கு உள்ளது, இவ்வாறு துரைமுருகன் பதில் அளித்தார்.
இதனிடையே, மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“