சென்னை மற்றும் கோவையில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் இல்லங்களிலும் அவருக்கு நெருக்கமானவர்கள் இல்லங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி பகுதியில் உள்ள கோவை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்திரசேகர் இல்லத்தில் காலை 6:00 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சுமார் 9 மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து சோதனை நிறைவு பெற்றது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் சில ஆவணங்கள் லேப்டாப் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றனர். சோதனை நிறைவடைந்ததையடுத்து, சந்திரசேகர் காரில் புறப்பட்டு சென்றார்.
இதனிடையே, அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள அவருக்கு சொந்தமான சி.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"