சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சுப்பிரமணியன் நகர், வெங்கடேஸ்வரா 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (வயது 42). ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருடைய தந்தை மூக்கையாபாண்டியன், 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீசாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ஸ்ரீபிரியாவுக்கு ஒரு அக்கா மற்றும் 2 தங்கைகள் உள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி சென்னையில் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். ஸ்ரீபிரியா, தனது தாயார் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு அவரும் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து ஸ்ரீபிரியா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீபிரியா தனது இருசக்கர வாகனத்தில் ஆவடி ரயில் வந்துள்ளார். வாகனத்தை ரயில் நிலைய நிறுத்தத்தில் விட்டு விட்டு 4-வது நடைமேடை வழியாக தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஸ்ரீபிரியா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார், ஸ்ரீபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிகின்றனர். ஸ்ரீபிரியா, தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/