scorecardresearch

அள்ள அள்ள பணம்; ரூ.5 கோடி லஞ்சம்: பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி அதிரடி சஸ்பெண்ட்

ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி கபிலன், கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க சுமார் ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

EOW
EOW

வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் ரூ.5 கோடி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி கபிலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான திட்ட விளம்பரங்களை வெளியிட்டது. அதில் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி 84,000 பேர் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. 84,000 பேரிடமிருந்து சுமார் ரூ. 6,000 கோடி முதலீடு பெற்று மோசடி செய்துள்ளனர். நிறுவனத்தில் பணம் போட்டு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரியாக பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி கபிலன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு அதில் 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்புடைய 31 இடங்களில் சோதனை செய்து ரூ. 1.12 கோடி பணம், ரூ. 34 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், 16 கார்கள், 49 அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் பெற்று அமலாக்கத்துறையும் விசாரணையை துவங்கி உள்ளது.

இந்நிலையில் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வரும் டி.எஸ்.பி கபிலன் கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகிகளிடமிருந்து ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் தொடர்பாக டி.எஸ்.பி கபிலனிடம் 2 நாட்களாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. அவரது நீலாங்கரை வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் லஞ்சம் பெற்றது உறுதியான நிலையில் டி.எஸ்.பி கபிலனை பணியிடை நீக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி அபின் தினேஷ் மேடாக் உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Economic offences wing dsp kabilan suspended in alleged rs 5 crore bribe case

Best of Express