Advertisment

அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற வழக்கு: சி.பி.ஐ-க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டில் இ.டி மனு தாக்கல்

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Dindigul Dist Court on ED officer Ankit Tiwari  bribery case tamil news

அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 Enforcement Directorate | Supreme Court: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை அவர் மீது 2018-ல் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க ரூ.3 கோடி லஞ்சம் கொடுக்க வேண்டும் என மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி பேரம் பேசியுள்ளார்.

Advertisment

கைது 

இதனையடுத்து, திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். இதுதொடர்பாக  டாக்டர் சுரேஷ் பாபு ஏற்கனவே அளித்த புகாரளித்த நிலையில், அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தலைமையிலான காவல் துறையினர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காரிலிருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி, அவரையும் கைது செய்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை அடுத்து, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீடு உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தூங்க முடியாமல் தவித்த அவர், பின்னர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். 

தள்ளுபடி - காவல் நீட்டிப்பு 

இதற்கிடையில், மதுரை சிறையில் இருக்கும் அங்கித் திவாரிக்கு ஜாமீன் கேட்டு அவருடைய தரப்பில், திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை டிசம்பர் 5ம் தேதி விசாரித்த நீதிபதி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கு ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் 4வது முறையாக நீட்டிக்கப்பட்டது. அவருக்கு நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திண்டுக்கல் நீதிமன்ற நீதிபதி மோகனா முன்பு அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி மோகனா, அங்கித் திவாரியை வரும் பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இ.டி விசாரணைக்கு மறுப்பு - மேல்முறையீடு

இதனிடையே, அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை அமலாக்கத்துறை விசாரிக்கக் கோரிக்கை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 12ம் தேதி விசாரித்த திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதனையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கை மனுவை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி.பி.ஐ-க்கு மாற்ற மனு தாக்கல் 

இந்த நிலையில், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 

அந்த மனுவில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ - PMLA) கீழ் திட்டமிடப்பட்ட குற்றங்கள் தொடர்பாக மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர்-களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக நோடல் அதிகாரியை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசாங்கத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

குற்றங்களின் தகவல்களை அரசு பகிராததால் மாநிலத்தில் பி.எம்.எல்.ஏ-இன் கீழ் குற்றங்களை விசாரிக்க முடியாததால் நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது என்றும், தமிழக அரசின் நிலை சட்டத்திற்கு எதிரானது என்றும், விசாரணைக்கு உதவுவதற்கு பதிலாக, அதன் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் மாநிலத்தில் திட்டமிட்ட அமைப்பு உள்ளது என்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவில், "பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் அதன் செயல்பாடுகளைச் செய்வதற்குத் தேவையான தொடர்புடைய எஃப்.ஐ.ஆர்-கள் மற்றும் ஆவணங்களை அணுகுவதில் இருந்து அமலாக்கத்துறை வேண்டும் என்றே தடுக்கப்படுகிறது.

பொதுத்தளத்தில் அனைத்து எஃப்.ஐ.ஆர்-களையும் திட்டவட்டமாக பதிவேற்றம் செய்யாமல், அதன் மூலம், நடைமுறையில் உள்ள புகார்தாரர்கள், அதாவது பொது மக்கள் மற்றும் அமலாக்கத்துறை உட்பட அனைத்து விசாரணை ஏஜென்சிகளுக்கும் எஃப்.ஐ.ஆர்-களின் நகல்களையும் சுதந்திரமாக அணுகுவது தடுக்கப்படுகிறது. அத்தகைய எஃப்.ஐ.ஆர்-களைப் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமலாக்கத்துறை தமிழக காவல்துறை இயக்குனரிடம் (டி.ஜி.பி) பலமுறை கோரிக்கை விடுத்தும் பி.எம்.எல்.ஏ இன் கீழ் நோடல் அதிகாரியை நியமிக்க தமிழக அரசு தவறிவிட்டது. இதேபோல்,  மணல் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணையின் போதும், அப்போது ​​பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-கள் போன்றவற்றின் நகல்களை கோரி தமிழக டி.ஜி.பி-க்கு பலமுறை கடிதம் எழுதப்பட்டது. ஆனால், இப்போதுவரை எந்த பதிலும் இல்லை.

டிசம்பர் 1, 2023 அன்று, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறையின் மதுரை அலுவலகத்தில் சட்டவிரோதமான மற்றும் அங்கீகரிக்கப்படாத சோதனையை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து தமிழக டி.ஜி.பி-யிடம் கோரிக்கை வைத்தும், இன்று வரை அந்த அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.

இது தொடர்ந்தால், அங்கித் திவாரியின் வழக்கு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் விசாரிக்கப்படாது என்றும், ஏஜென்சியைக் குறிவைத்து பண மோசடி விசாரணைகளைத் தடம் புரளச் செய்வதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்தும்" என்றும் அமலாக்கத்துறை தனது மனுவில் தெரிவித்துள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: ED approaches top court to shift case against its officer in Tamil Nadu to CBI

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Supreme Court Enforcement Directorate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment