Advertisment

சரவணா ஸ்டோர்ஸின் ரூ235 கோடி; லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.178 கோடி சொத்துக்கள் முடக்கம்

சென்னை தி நகர் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸின் ரூ.234.75 மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை; லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.173 கோடி சொத்துக்களும் முடக்கம்

author-image
WebDesk
New Update
சரவணா ஸ்டோர்ஸின் ரூ235 கோடி; லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.178 கோடி சொத்துக்கள் முடக்கம்

ED froze Saravana stores Rs.235 crore and Lottery martin Rs.173 crore assets: சென்னை தி நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.234.75 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதேபோல் லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.178.48 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Advertisment

சரவணா ஸ்டோர்ஸ் சொத்துக்கள் முடக்கம்

பணமோசடி தொடர்பான வழக்கில் இந்தியன் வங்கியை ஏமாற்றியதற்காக சரவணா ஸ்டோர்ஸ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: காணாமல் போன பைபிள் முதல் தமிழ் பிரதி; லண்டனில் கண்டுபிடித்த காவல்துறை

சரவணா ஸ்டோர்ஸ் (கோல்ட் பேலஸ்) பங்குதாரர்களான பல்லக்குதுரை (இறந்தவர்), சுஜாதா மற்றும் ஷிரவன் ஆகியோர் வங்கியில் கடன் பெறுவதற்காக, வங்கியில் இருப்புநிலைக் கணக்குகளை உருவாக்கி, நல்ல நிதி நிலையைக் காட்டி வங்கியை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சிபிஐ (பொருளாதார குற்றப்பிரிவு) பதிவு செய்த ஏப்ரல் 25, 2022 தேதியிட்ட எஃப்ஐஆர் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணையை மே 26, 2022 அன்று தொடங்கியது.

இதுகுறித்த அமலாக்கத்துறை அறிக்கையில், “தாக்கல் செய்யப்பட்ட விற்பனை மற்றும் நிறுவனத்தின் கடன் உள்ளீடுகளுக்கு இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. கடனைப் பெறும் நேரத்தில் வரவிருக்கும் நிதியாண்டுகளில் எதிர்பார்க்கப்படும் வருவாய் குறித்த தவறான தகவல்களை நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும், இந்தியன் வங்கியை ஏமாற்ற, கணிசமான தவறான நஷ்ட கணக்கு மற்றும் தனிப்பட்ட ஆதாயம் மூலம், நிறுவனத்தின் சொத்து மதிப்பீட்டாளர், வங்கி அதிகாரிகள் மற்றும் சில நபர்களுடன் கூட்டு சேர்ந்து உண்மையான நியாயமான சந்தை மதிப்பை விட அதிக விலைக்கு சொத்துக்களை வாங்க முன்வந்தது.

விசாரணையில் மூவரும் சரக்குகளை அதிகமாகக் குறிப்பிட்டது, வங்கிக்குத் தெரியாமல் சொத்துகளை விற்பனை செய்தது, ஓப்பன் கேஷ் கிரெடிட் (ஓசிசி) வரம்புகளை பயன்படுத்தி கடனை திருப்பிச் செலுத்தியது, அனுமதி பெறாத நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது மற்றும் வங்கிக்கு தவறான இழப்பை ஏற்படுத்த வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. குற்றச் செயல்களின் மூலம் நிறுவனம் 240 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டின் சொத்துக்கள் முடக்கம்

இதேபோல, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின், கடந்த 2009-10 ஆண்டுகளில் சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி தொழில் மூலம் கிடைத்த ரூ.910 கோடியை மறைத்து, சுமார் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்தது, சட்டவிரோத பணப் பரிமாற்றம் மூலம் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்தது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.

அதன் அடிப்படையில், சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக மார்டின் மற்றும் அவர் பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.

இது தொடர்பாக, பல்வேறு கட்டங்களாக லாட்டரி அதிபர் மார்ட்டின் நடத்தி வரும் நிறுவனங்கள், அவருக்கு சொந்தமான கட்டிடங்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது ரூ.173.48 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஏற்கனவே ரூ.277.59 கோடி மதிப்புடைய சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment