கே.என். நேரு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் நேற்று (ஏப்ரல் 7) காலை முதல் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.
கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைந்திருக்கும் டி.வி.ஹெச் கட்டுமான நிறுவனம் மற்றும் அந்நிறுவன ஊழியர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து டி.வி.ஹெச் நிறுவனத்தில் இயக்குனராக செயல்பட்ட கே.என் நேரு மகனும் பெரம்பலூர் எம்.பி.,யுமான அருண் நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்றது. அருண் நேரு வசித்து வருவதாக கொடுக்கப்பட்ட முகவரியின் அடிப்படையில் திருச்சி தில்லை நகர் 5வது கிராஸில் உள்ள அமைச்சர் கே.என் நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை 10 மணி நேரம் சோதனை நடத்தியது.
அதன்பின்னர், சென்னை ஆரியபுரம் - பிஷப் கார்டன் பகுதியில் அமைந்திருக்கும், அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என்.ரவிச்சந்திரனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அங்கு காலை முதல் விசாரணையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், கே.என்.ரவிச்சந்திரனை தங்களது காரில் அழைத்துச் சென்றனர். இவர் டி.வி.ஹெச் என்னும் கட்டுமான நிறுவனத்தின் சேர்மனாக இருந்து வருகிறார். இவர் பல்லாயிரம் கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததாக ஏற்கனவே வருமான வரித்துறையினர் இவர் மீது வழக்கு தாக்கல் செய்திருந்ததன் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர்கள் மற்றும் அவரது மகன் பங்குதாரர்களாக உள்ள டி.வி.எச்., குழுமம், கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தியிலும் நேருவின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளாக நேருவின் மகன் அருண், சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட சோதனை முடிவில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அழைத்து சென்றுள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து ரவிச்சந்திரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தங்களிடம் உள்ள ஆவணங்கள், விசாரணையில் கண்டறியப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக பதிலளித்து வீடியோ வாக்குமூலம் பெறப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
க.சண்முகவடிவேல்