காட்பாடியில் அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், 6 மணி நேர நீண்ட காத்திருப்புக்குப் பின், பிற்பகல் 3 மணியளவில் சோதனையைத் தொடங்கினர். அப்போது, அவர்கள் கடப்பாரை சுத்தியல், உளியுடன் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும், வேலூர் தொகுதி எம்.பி-யுமான கதிர் ஆனந்த் வசிக்கும் வீட்டில், சோதனை செய்வதற்காக அமலாக்க துறையினர் வெள்ளிக்கிழமை காலை சுமார் 8:55 மணி அளவில் அவர்களுடைய வீட்டுக்கு தந்தனர். ஆனால், அங்கே அமைச்சர் துரைமுருகன், எம்.பி கதிர் ஆனந்த் இருவரும் இல்லாததால் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் காத்திருணந்தனர்.
சோதனை நடத்துவதற்காக, அமலாக்கத் துறையினர் கதிர் ஆனந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அப்போது சோதனைக்கு எம்.பி. கதிர் ஆனந்த் ஒப்புகொண்ட நிலையில், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில், கட்சி நிர்வாகி வன்னிய ராஜா, வழக்கறிஞர் பாலாஜி ஆகிய மூவரிடம் அமலாக்கத் துறையினர் அத்தாட்சி கையெழுத்தை பெற்று பிற்பகல் 2:45 மணியளவில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனையை தொடங்கினர்.
அமலாக்கத்துறையினரின் இந்த சோதனையின்போது எம்.பி. கதிர் ஆனந்தின் வழக்கறிஞர் பாலாஜியையும் அமலாக்கத் துறையினர் உடன் அழைத்துச் சென்றனர்.
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தபோது, ஒருவர் கடப்பாரையுடன் உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கடப்பாரை, சுத்தியல், உளி ஆகியவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துவரச் சொல்லியதாக அவர் அவற்றை உள்ளே எடுத்துச் சென்றார். இதனால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சாவி இல்லாததால் உளி மற்றும் சுத்தியை பயன்படுத்தி 2 கதவுகள் திறக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே, அமைச்சர் துரைமுருகன், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தன் வீட்டில் நடைபெறும் அமலாக்கத் துறை சோதனை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், கோட்டூர்புரத்தில் உள்ள தன் இல்லத்துக்கு புறப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், "வீட்டிற்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. வேலைக்காரர்களுக்கும் யார் வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ, அதே அளவுதான் எனக்கும் தெரியும்” என்று கூறினார்.
அதே போல, காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் பகுதியில் தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட அணி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், அவருக்கு சொந்தமான சிமெண்ட் குடோனிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை சுமார் 11 நேரத்துக்குபின் நிறைவடைந்தன. சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.