/indian-express-tamil/media/media_files/BC5O2t7zE7qUdKNU8QCm.jpeg)
சட்டவிரோத மணல் விற்பனை; பணப் பரிமாற்றம் குறித்து விசாரிக்கும் அமலாக்கத்துறை; ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்
தமிழகத்தில் நடந்த பல கோடி ரூபாய் மணல் விற்பனை மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையின் (ED) சிறப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
மணல் விற்பனை மோசடியில் சில தனிநபர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிரதான சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட பெரும் பணப் பரிமாற்றங்களை சிறப்புக் குழுவினர் சரிபார்த்து வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன என தி இந்து ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய அமலாக்கத்துறை விசாரணையில், 4,730 கோடி ரூபாய்க்கு ஆற்று மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்ததில் நடைபெற்ற பணமோசடி குற்றங்களை அமலாக்கத்துறை ஆராய்ந்து வருகிறது, மேலும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் எனத் தோன்றும் பணத்தின் ஆதாரம் மற்றும் பரிவர்த்தனையை நாங்கள் இப்போது ஆய்வு செய்து வருகிறோம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த உடனேயே, அமலாக்கத்துறை குழுக்கள் செப்டம்பர் 12, 2023 அன்று மாநிலம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் மணல் சுரங்கத் தளங்கள் அல்லது மணல் இருப்புத் தளங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தின, அப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி இழப்பை ஏற்படுத்தக் கூடிய போலி பில்கள் மற்றும் போலி QR குறியீடுகள் போன்ற குற்றஞ்சாட்டக்கூடிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்பட்டது.
எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், பி.கரிகாலன் மற்றும் மாநில அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் உட்பட ஒப்பந்ததாரர்கள் அல்லது அவர்களது கூட்டாளிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
நீர்வளத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய பின்னர், விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு நான்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றது.
இருப்பினும், "சட்டவிரோத" மணல் அகழ்வு வழக்கில் சம்மனுக்கு பதில் அளிக்குமாறு நான்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட தடையை எதிர்த்து அமலாக்க இயக்குனரகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குனரகம், மாநிலத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 200க்கும் மேற்பட்ட அகழ்வு இயந்திரங்களுடன், மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.