வேலூர் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீடு உட்பட 4 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் இந்த சோதனை நள்ளிரவு 1.20 மணியளவில் முடிவடைந்தது.
காட்பாடி காந்திநகரில் உள்ள திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சி.ஆர்.பி.எப் காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான தனியார் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை சோதனையை தொடங்கப்பட்டது.
துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளிலும் நேற்று காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அமைச்சர் துரைமுருகன் சென்னையிலும் எம்.பி கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாயும் சென்றிருந்த நிலையில் அவர்களது வீட்டில் மட்டும் சோதனை தொடங்காத நிலையில் மற்ற இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதனால், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இந்நிலையில் காட்பாடி திமுக கிளை செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சோதனை நடத்த கதிர்ஆனந்த் தரப்பிலிருந்து அமலாக்கத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சோதனை தொடர்பான ஆவணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டு வன்னியராஜா, சுனில்குமாரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகளை திமுகவினர் சோதனை செய்த பிறகே வீட்டினுள் ரெய்டு நடத்த அனுமதித்தனர்.
சுமார் 7 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் பிற்பகல் 2 மணியளவில் சோதனையைத் தொடங்கி நள்ளிரவு 1.20 மணியளவில் சோதனை நிறைவடைந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர். கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.